Description
| நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கின்றான்; ஆகவே நீங்களும் அவனைப் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள். 35:6 |
| எதிரிகளின் தந்திரங்களை ஆராய்ந்து, அவர்களைத் தோற்கடிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பவனே புத்திசாலி.
எனவே உமது இறைவன் எச்சரிக்கின்றான், “நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கின்றான்; ஆகவே நீங்களும் அவனைப் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள். 35:6 |
| (இப்லிஸ்) ஷைத்தானின் வரலாறு |
| ஷைத்தான், புகையற்ற நெருப்பிலிருந்து படைக்கப்பட்டான். அவன் வானவராக (மலக்காக) இல்லாவிட்டாலும், அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்ததன் காரணமாக, அவன் அவர்களிடையே சொர்க்கத்தில் இருந்தான். அல்லாஹ் நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைப் படைத்தபோது, சொர்க்கத்தில் உள்ளவர்கள் ஆதமுக்கு முன்பாகச் சிரம் பணிய வேண்டும் என்று கட்டளையிட்டான், ஆனால் ஷைத்தான் பெருமையினாலும் ஆணவத்தினாலும் மறுத்து,
“நான் அவனை விட சிறந்தவன், நீ என்னை நெருப்பிலிருந்து படைத்தாய். அவனை (ஆதமை) களிமண்ணிலிருந்து படைத்தாய். 7:12 |
| அல்லாஹ் ஷைத்தானை சபித்து அவனை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றினான். (ஆதம் நபியால், தான் சபிக்கப்பட்டதாக பொறாமை கொண்டு ஆதம் (அலை) அவர்களின் சந்ததிகளான) மனிதகுலத்தை வழி கெடுக்க ஷைத்தான் ஒரு வாய்ப்பைக் கேட்டான், அல்லாஹ் அவனின் வேண்டுகோளை ஏற்று (உனது பாதையை பின்பற்றுபவர்கள் நரகத்திற்கே செல்வார்கள் என்பதை எச்சரித்தான்) |
| “நீ என்னை வழிகெட்டவனாக ஆக்கியதன் காரணத்தால் (ஆதமுடைய சந்ததிகள்) உன்னுடைய நேரான வழியில் செல்லவிடாமல் தடுப்பதற்காக தருணம் பார்த்துக் கொண்டிருப்பேன். என்று (இப்லீஸாகிய) அவன் கூறினான்.) “பின்னர் நிச்சயமாக அவர்களுக்கு முன்னும், அவர்களுக்குப் பின்னும், அவர்களின் வலப்புறங்களிலும், இடப்புறங்களிலும் அவர்களை வழி கெடுத்துக் கொண்டேயிருப்பேன், மேலும், அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துபவர்களாக நீ காணமாட்டாய். 7:16-17 |
| ஷைத்தானின் சூழ்ச்சிகள் |
| அல்லாஹ்வின் ஒருமையை நிராகரித்தல் |
| இஸ்லாத்தின் அடிப்படை இறைவனின் ஏகத்துவத்தின் மீதான நம்பிக்கையாகும் - (அல்லாஹ்வுக்கு) இணை, துணை, மற்றும் மகனோ இல்லை. மாறாக, அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது அல்லது பிறரை அல்லாஹ்வுக்கு சமமானவர்களாக (நிகராக) ஆக்குவது மிகப்பெரிய பாவமாகும். |
| எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:
· அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கு வணக்க வழிபாடுகளை செய்தல் (எ.கா. அல்லாஹ்வைத் தவிர்த்து மற்றவர்களை வணங்குதல் அல்லது மன்றாடுதல்). · அல்லாஹ்வின் சில பண்புகளை மற்ற பொருள்கள் அல்லது உயிரினங்களுக்கு உரித்தாக்குதல் (எ.கா. சிலைகள் / அதிர்ஷ்டம்). · அல்லாஹ்வுக்கு மகன், தாய் அல்லது வேறு ஏதேனும் துணை இருப்பதாகக் கூறுதல். |
| இவ்வாறு, மனிதகுலத்தை நிராகரிப்புக்கு தூண்டுவது ஷைத்தானின் முக்கிய கவனம். இருப்பினும், தெளிவான நம்பிக்கை கொள்ளும் மக்களை ஷைத்தானால் தவறாக வழிநடத்த முடியாவிட்டால், மூடநம்பிக்கை, அதிர்ஷ்டம், ஜோதிடம் மற்றும் குறி சொல்லுதல் போன்ற நுட்பமான வழிமுறைகளைக்கொண்டு அவன் வழிகெடுக்க நாடுகிறான். இது போன்ற மூட நம்பிக்கைகள், அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்ற உண்மைக்கு முரண்படுகின்றன, மேலும் அவன் மட்டுமே நன்மையையும் தீமையையும் தரக்கூடியவன். |
| மார்க்கத்தில் வழிகெட்ட நூதனமான செயல்கள். |
| “…. உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நான் பரிபூரணமாக்கி விட்டேன்...” அல்குர்ஆன் 5:3 |
| அல்லாஹ்வால் அல்லது முஹம்மது நபி (ஸல்) அவர்களால் கடமை ஆக்கப்படாத தவறான நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளை இஸ்லாத்தில் புகுத்துவதற்கு ஷைத்தான் சில மக்களை கவர்ந்திழுப்பான். உண்மையில், இஸ்லாம் முழுமையற்றது அல்லது அல்லாஹ்வினால் முழுமைபடுத்தப்படவில்லை என்ற நம்பிக்கையை விதைத்து புதுமையான காரியங்களை ஏற்படுத்த முயலுவான், இது ஒரு அவநம்பிக்கையாகும், ஏனெனில் இது அல்லாஹ்வினால் அருளப்பட்டதை நிராகரிப்பதாகும். |
| பல நூதன வழிகேடான செயல்கள், மார்க்க கட்டளை போன்றே கவனிப்புடன் செயல்படுத்தப்படுகின்றன, மேலும் அல்லாஹ் ஏற்படுத்தியதைப் போலவே முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மார்க்கத்தில் புதுமைகளைப் பின்பற்றுபவர்கள் தங்கள் செயல்கள் (அல்லாஹ்வால்) ஏற்றுக்கொள்ளப்பட்டதாக நம்புகிறார்கள், உண்மையில் அவர்கள் ஒரு பாவத்தைச் செய்கிறார்கள். இந்த வழிகேடர்கள் தங்கள் தவறுகளை அடையாளம் காணாததால், பாவமன்னிப்பு அவசியமில்லை என்று கருதுகின்றனர். |
| கடமையான செயல்களை புறக்கணித்தல் |
| (நபியே!) நிச்சயமாக தொழுகை மானக்கேடான காரியங்களிலிருந்தும். பாவங்களிலிருந்தும் (மனிதனை) விலக்கிவிடும். 29:45 |
| நிச்சயமாக, ஷைத்தான் நாடுவதெல்லாம், தொழுகையை (நிறைவேற்றுவதை) விட்டும் உங்களை அவன் தடுப்பதேயாகும். 05:91 |
| ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் அல்லாஹ் சில செயல்களை கடமையாக்கியுள்ளான், அதில் மிகவும் வழக்கமானவை, ஐந்து நேரத் தொழுகைகள் ஆகும். எனவே, நாம் மேலும் பாவத்தில் விழும்படி ஷைத்தான் தொழுகைகளைப் புறக்கணிக்க முயல்கிறான். |
| படிப்படியாக ஏமாற்றுதல் |
| முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) உருவ வழிபாடு எவ்வாறு தொடங்கியது? என்று எளிய முறையில் விளக்கியுள்ளார்கள், இது ஷைத்தான் தனது நோக்கங்களை எவ்வாறு மெதுவாக நிறைவேற்றுகிறான் என்பதையும் காட்டுகிறது.
நல்லடியார்களில் சிறந்தவர்கள் சிலர் இறந்த பிறகு, அப்போது வாழ்ந்தவர்களைத் தூண்டி, அந்த நல்ல மனிதர்களை நினைவுகூரும் வகையில் ஷைத்தான் சிலைகளை அமைக்கத் தூண்டினான். சிலைகள் நியாயமான நினைவுச்சின்னங்கள் என்றே பலரும் நம்பினர்.
ஆனால், அந்த தலைமுறை மறைந்த பிறகு, சிலைகள் ஏன் அமைக்கப்பட்டன என்பதை மக்கள் மறந்து விட்டனர். அப்போது ஷைத்தான் மக்களை மோசடி செய்து, அவற்றை நமது முன்னோர்கள் வழிபட்டதாகவும், அவற்றின் மூலம் மழை போன்ற நன்மைகள் கிடைத்ததாகவும் நம்பும் படி செய்தான். இதனால், மக்கள் அந்த சிலைகளை உண்மையிலேயே வழிபடத் தொடங்கினர். |
| ஷைத்தான் மக்களை தவறான செயல்களுக்குள் இழுக்க பல நூதன முறையை பயன்படுத்துகிறான். உதாரணமாக: அவன் தடைசெய்யப்பட்ட பாலியல் செயல்களைச் செய்யத் தூண்டுவதைப் பாருங்கள்,
அது ஒரு சாதாரணப் பார்வையிலிருந்து தொடங்குகிறது. பிறகு அந்த பார்வை ஒரு சிந்தனையாக மாறுகிறது. அந்த சிந்தனை ஒரு சிரிப்புக்கு வழிவகுக்கிறது. பின், அது நல்ல உரையாடலாக மாறுகிறது. அதன் பிறகு, தனிமையில் சந்திக்கும் நிலை உருவாகிறது. இறுதியில், அது பாவமாக முடிகிறது. |
| அதே போல், ஷைத்தான், மக்களை அவர்களின் கட்டாயக் கடமைகளை செய்ய விடாமல் நூதனமான முறையில் செயல்படுகிறான். முதலில், மக்கள் விரும்பிச்செய்யும் நற்காரியங்களை செய்யாமல் விட்டு விடுவதற்கு தூண்டுகிறான். இதனால், மக்கள் கட்டாயக் கடமைகளை நிறைவேற்றாமல் சோம்பேறியாக மாறுவார்கள். அதே சமயம், அவன் சிறிய பாவங்களை செய்ய வைத்திட முயற்சிக்கிறான், அது இறுதியில் பெரிய பாவங்களைச் செய்யும் வழிக்கு சென்று விடுகிறது. |
| தீய செயல்களை அழகுபடுத்துதல் |
| …அவர்கள் செய்து கொண்டிருந்ததையே, ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காட்டிவிட்டான்.06:43 |
| ஷைத்தான் பாவங்களை மக்களுக்கு நல்லதாகத் தோன்றும்படி காட்டுகிறான். உதாரணமாக, அவன் ஆதமுக்கும் அவரது மனைவி ஹவ்வாவுக்கும் (இறைவன் தடை செய்த) மரத்தின் பழத்தை சாப்பிடும்படி மோசடியில் இழுத்தான். அது அவர்களுக்கு ஒரு நன்மை தரும் செயலாகவே தோற்றமளித்தது.
அதேபோல, இன்று ஷைத்தான் பல்வேறு பாவங்களை நேர்மையான அல்லது பயனுள்ளதாக மக்கள் நினைக்கும் விதத்தில் பிரதிபலிக்கிறான். இதை உணர்ந்து, அல்லாஹ்வின் வழிகாட்டலுக்கு கட்டுப்பட்டு நம்மை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். |
| ஆனால் ஷைத்தான் அவருக்கு (ஆதமுடைய மனதில்) ஊசலாட்டத்தை உண்டாக்கி விட்டான், நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும், முடிவில்லா அரசாங்கத்தையும் உமக்கு நான் அறிவித்துத் தரட்டுமா? என்று கேட்டான். 20:120 |
| ‘‘(அதன் கனியைப் புசித்தால்) நீங்கள் இருவரும் வானவர்களாகவோ அல்லது மரணமற்றவர்களாகவோ ஆகிவிடுவீர்கள் என்பதற்காகவே தவிர (வேறெதற்காகவும்) உங்கள் இறைவன் இம்மரத்தை விட்டு உங்களைத் தடுக்கவில்லை'' என்று கூறியதுடன், ‘‘நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையையே கருதுகிறேன்'' என்று அவ்விருவரிடமும் சத்தியமும் செய்து, அவர்களை மயக்கி, (அம்மரத்தின் கனியைப் புசிப்பதற்காக) அதன் பக்கம் அவர்களைச் செல்ல வைத்தான். அவ்விருவரும் அம்மரத்(தின் பழத்)தைச் சுவைக்கவே, அவ்விருவரின் மர்ம உறுப்புகளும் அவர்களுக்குத் தெரிந்து, அச்சோலையின் இலையைக் கொண்டு தங்களை மூடிக்கொள்ள அவர்கள் முயற்சித்தனர். அது சமயம் இறைவன் ‘‘அம்மரத்தை விட்டும் நான் உங்களைத் தடுத்திருக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களிருவருக்கும் பகிரங்கமான எதிரி என்றும் நான் உங்களுக்குக் கூறவில்லையா?'' என்று அவ்விருவரையும் அழைத்துக் கூறினான். 7: 20- 22 |
| ஆதமுக்கு பல அனுமதிக்கப்பட்ட உணவுகள் இருந்தாலும், ஷைத்தான் ஆதமை தடைசெய்யப்பட்ட மரத்தில் இருந்து பழத்தை சாப்பிடச் செய்தான். அதேபோல், ஷைத்தான் மக்களை அனுமதிக்கப்பட்ட செயல்களில் ஈடுபடுவதற்குப் பதிலாக, தடைசெய்யப்பட்ட செயல்களைச் செய்யத் தூண்டுகிறான். உதாரணமாக: திருமணம் செய்வதற்குப். பதிலாக விபச்சாரத்தின் பக்கம் நெருங்குதல், குர்ஆன் ஓதுவதற்குப் பதிலாக இசையின் பக்கம் சாய்தல், ஹலாலான வருமானதிற்குப் பதிலாக ஹராமான வருமானம் ஈட்டுதல், மற்றும் ஆரோக்கியமான மற்றும் பரிசுத்தமான உணவுகளுக்கு பதிலாக தடைசெய்யப்பட்ட உணவு மற்றும் பானங்களின் மனம் செல்லுதல். |
| அதிகரிக்கும் இச்சைகள் |
| ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிக்கிறான்; அவர்களுக்கு வீணான எண்ணங்களையும் உண்டாக்குகிறான்; மேலும் அந்த ஷைத்தான் ஏமாற்றுவதைத் தவிர வேறு (எதனையும்) அவர்களுக்கு வாக்களிக்கவில்லை. 04:120 |
| ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிற ஆசைகள் மற்றும் சோதனைகள் கொண்டு ஷைத்தான் விளையாடுகிறான், பின்விளைவுகளைக் கருத்தில் கொள்ளாமல், உடனடி திருப்தியில் ஈடுபடும்படி மனிதனை நம்ப வைக்கிறான். இதை தவிர்க்க முடியாமல் இந்த வாழ்க்கையிலோ அல்லது தீர்ப்பு நாளிலோ! வருத்ததிற்கும் அவமானத்திற்கும் வழிவகுக்கிறது. |
| நேரத்தை வீணடித்தல் |
| ஷைத்தானால் யாரையாவது பாவத்தில் சிக்க வைக்க முடியாவிட்டால், எந்த நன்மையும் இல்லாத அற்ப செயல்களில் அவர்களை மும்முரமாக வைத்திருக்கிறான். நம்முடைய நேரத்தை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, நம்முடைய முன்னுரிமைகளை நிறைவேற்றி, உயர்ந்த இலக்குகளை அடைவதற்குப் பதிலாக, ஷைத்தான் பயனற்ற செயல்களால் நம்மை ஆக்கிரமிக்கிறான். |
| ஷைத்தானை எப்படி தோற்கடிப்பது |
| நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கின்றான்; ஆகவே நீங்களும் அவனைப் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள். 35:6 |
| முதலில் ஷைத்தான் நமது பகைவன் என்று அறிய வேண்டும். பகைவனை நன்கு அறிந்தால், அவனை எதிர்கொள்வதில் வெற்றி பெற முடியும். ஷைத்தானின் ஆற்றல் அவனது மோசடித்திறனில் உள்ளது. ஆகையால், அவனின் தந்திரங்களையும் அணுகு முறைகளையும் நன்கு புரிந்துகொண்டு, நாம் பாதுகாப்பான முறையில் நடந்து கொள்வது அவசியம். |
| அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள் |
| அல்லாஹ்வின் பாதுகாப்பைக் கோருவதும், உதவிக்காக அவனை மட்டுமே நம்புவதும் ஷைத்தானை வீழ்த்துவதற்கான ஒரே கருவியாகும். குர்ஆனின் சூரா அல்- ஃபலக் மற்றும் அன்- நாஸ் ஆகிய அத்தியாயங்கள் ஷைத்தானிடமிருந்து தொடர்ந்து பாதுகாப்பைப் பெற பயன்படுத்தப்படலாம், அவற்றை நாம் உயிருடன் இருக்கும் வரை ஓத வேண்டும், ஷைத்தான் நம்மை தவறாக வழிநடத்தும் முயற்சியை கைவிட மாட்டான் என்பதை நாம் உணர வேண்டும். நாம் எப்போதும் சரியான வழிகாட்டுதல் மற்றும் பாதுகாப்பிற்காக அல்லாஹ்விடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்ய வேண்டும். |
| மன்னிப்பை கேளுங்கள் |
| “பாவத்திற்காக மன்னிப்பு தேடுபவர் பாவம் இல்லாதவனைப் போன்றவராவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: இப்னு மாஜா |
| ஒரு வேளை நம்மையறியாமல் ஷைத்தானின் சூழ்ச்சிகளுக்கு ஆட்பட்டுவிட்டாலும், அல்லாஹ்வின் அருளால், நமது தவறுகளை ஒப்புக்கொண்டு, அல்லாஹ்விடம் மனந்திரும்புவதன் மூலம் நமது தவறுகளைத் திருத்திக் கொள்ள இன்னும் வாய்ப்பு உள்ளது. |
| நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ஷைத்தான் இறைவனிடம், 'உன் மகிமையின் மீது ஆணையாக, உமது அடியார்களின் ஆன்மா அவர்களின் உடலில் இருக்கும் வரை, நான் அவர்களை வழிகெடுக்க முயற்சிப்பேன்' என்று கூறினான், அதற்கு இறைவன். என் மகிமையின் மீது ஆணையாக அவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்கும் வரை நான் அவர்களை மன்னித்துக்கொண்டே இருப்பேன் – என்று கூறினான். அஹமத் |
| பாவமன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமானால், அதே பாவத்தை மீண்டும் ஒருபோதும் செய்யக்கூடாது என்ற நோக்கத்துடன் இருக்க வேண்டும் |
| பாவச் சூழலைத் தவிர்க்கவும் |
| அல்லாஹ் ஆதமை ஒரு குறிப்பிட்ட மரத்திலிருந்து தடை செய்தபோது, "இந்த மரத்தில் இருந்து சாப்பிடாதே" என்று கூறவில்லை, மாறாக "இந்த மரத்தின் அருகில் வராதே" என்று கூறினான். அல்குர்ஆன் 2:35. ஆகவே, பாவம் செய்ய வழிவகுக்கும் எந்த சூழ்நிலையிலிருந்தும் நாம் விலகி இருக்க வேண்டும். |
| நல்ல தோழமையை வைத்துக் கொள்ளுங்கள் |
| அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிவுரை கூறினார்கள், "ஒரு நபர் தனது நெருங்கிய நண்பரின் பாதையில் இருக்கிறான், அதனால் நீங்கள் யாரை நண்பராகக் கொள்கிறீர்களோ! அதில் கவனமாக இருங்கள்." நூல்: திர்மிதீ |
| உங்களின் நட்பு வட்டாரத்தினால் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு சில விளைவுகள் ஏற்படலாம். எனவே நல்ல நண்பர்கள் உங்களை அல்லாஹ்வைப் பற்றி நினைவூட்டிக் கொண்டு, நல்ல செயல்களை செய்ய ஊக்குவிப்பார்கள், அதேபோல், கெட்ட நட்பு உங்களை ஷைத்தானின் பாதைக்கு இழுத்துச் செல்லும்.. |
| நல்ல செயல்களைச் செய்யுங்கள் |
| நற்செயல்களில், குறிப்பாக வணக்க வழிபாடுகளில் ஈடுபாட்டுடன் இருப்பது ஷைத்தானை தோற்கடிப்பதற்கான ஒரு சிறந்த வழிமுறையாகும். |
| ஷைத்தான் ஒரு (தவறான) எண்ணத்தை உமது மனதில் ஊசலாடச் செய்து (தகாததொரு காரியத்தைச் செய்யும்படி உம்மைத் தூண்டினால் உடனே நீர் உம்மை காப்பாற்றும்படி அல்லாஹ்விடம் கோருவீராக. நிச்சயமாக அவன் நன்கு செவியுறுபவன், (அனைத்தையும்) நன்கறிந்தவன். 7:200 |
| முடிவுரை |
| ஷைத்தானின் சூழ்ச்சிகளை நாம் அறிய வேண்டுமென்றால், அவனைத் தோற்கடிப்பதற்கான முயற்சிகளை பயன்படுத்தினால் மட்டுமே ஷைத்தானுக்கு எதிரான போரில் வெற்றி பெற முடியும். நியாயத்தீர்ப்பு நாளில், ஷைத்தான் தனது பாவங்களையும் வரம்பு மீறல்களையும் ஒப்புக்கொள்வான். அல்லாஹ் தான் உண்மையைச் சொல்பவன் என்றும், தான் (ஷைத்தான்) ஒரு பொய்யன் என்றும் அவன் அனைத்து படைப்புகளுக்கு முன்பாக அறிவிப்பான். |
| சர்வவல்லமை மிக்க அல்லாஹ்விடம், அவனது மிக அழகான பெயர்களாலும், உன்னதமான பண்புகளாலும், எங்கள் பாவங்களை மன்னித்து, ஷைத்தானின் சூழ்ச்சிகளிலிருந்து எங்களை பாதுகாக்குமாறு வேண்டுகிறோம். |
